தமிழர் பிரதேசத்தில் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படும் பெண் அதிகாரி; நீதிகோரும் கணவர்
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராம சேவகரான தனது மனைவி மேலதிகாரிகளால் பழிவாங்கப்படுவதாக கூறி கணவர் , ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2017 வரட்சி நிவாரணப் பட்டியல்
2017ஆம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் குறித்த கிராம அலுவலர் கடமையாற்றி வந்த நிலையில் அக் காலப்பகுதியில் வரட்சி நிவாரணப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த கிராம அலுவலர் பிரிவில் உள்ள குடும்பஸ்தர் நிறுவனமொன்றில் குறித்த காலப் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.
குடும்பஸ்தரும் வரட்சி நிவாரணம் பெற்றுக் கொள்ளும் முகமாக விண்ணப்பித்திருக்கின்றார். நிறுவன ஊழியராக கடமையாற்றுகின்றார் எனும் ரீதியில் அவருக்கு வரட்சி நிவாரண வேண்டுகை கிராம அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து நிராகரிப்பு தொடர்பில் அப்போதைய பிரதேச செயலாளர் கிராம அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டிருந்த நிலையில் கிராம அலுவலருக்கு தெரியாமல் வரட்சி நிவாரணம் மேற்கூறிய நிறுவன ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட செயலாளரினால் மூவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன் முடிவில் ஆலங்குளம் கிராம அலுவலர் தெரிவுப் பட்டியலினை முறைகேடாக தெரிவு செய்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
கிராம அலுவலர் மேன்முறையீடு
அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட செயலகத்தினரால் ஆலங்குளம் கிராம அலுவலருக்கு பணியிட மாற்றம் வழங்கப்படிருந்தது. தனது கட்டாய பணியிட மாற்றத்தை எதிர்த்து கிராம அலுவலர் மேன்முறையீடு செய்தும், தெரிவுப் பட்டியல் தவறு என்ற காரணத்தைக் கூறி குறிப்பிட்ட நாட்களுக்குள் மாறப்பட்ட இடத்தில் கடமையை பொறுப்பேற்குமாறும் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை துணுக்காய் பிரதேச செயலக வேறு கிராம சேவகர் பகுதிகளில், யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவரின் பெயரும் வரட்சி நிவாரணத் தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது..
இதேவேளை தனது மனைவி மேலதிகாரிகளால் பழிவாங்கப்படுவதாக கணவன், கிராம அலுவலரான தனது மனைவி பழி வாங்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தன்னால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் குறித்த பிரச்சினைக்கான தீர்வினை ஜானதிபதி பெற்றுத் தரவேண்டும் என்றும் கணவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.



