கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசாங்கம்?
வருகின்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நேற்று (13) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்தது,
கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை இம்மாத சம்பளத்தில் இருந்து அறவிட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விடுமுறை கொடுப்பனவு, மேலதிக நேரக்கொடுப்பனவு எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சிக்கலான காலக்கட்டத்தில் அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கம் அறவிடுவதென்பது கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்கின்ற நிலையாகும். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு எங்களில் கஷ்டங்கள் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படியொரு தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள்.
இதேவேளை வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது குறைந்த பட்சம் சிலரது ஒரு நாள் உணவை துண்டாடும் செயலாகும். இது மனிதாபிமானமுள்ளவர்களால் அனுமதிக்க முடியாத நிலையாகும்.
இவ்விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்திய போதும் அவை எவற்றையும் காதில் கொள்ளாது சம்பளத்தை அறவிடுவதில் அரசாங்கம் மும்முரமாக இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இதிலிருந்து அரச ஊழியர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்துக்கு கூஜா தூக்குவோரும் கூட இந்த நிலையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அரச ஊழியர்களின் நலன்கள் மீது அவர்ளுக்கும் அக்கறை இல்லை என்பதை தெளிவாக தெரிகிறது.
அரசாங்கத்தில் இருக்கும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்துக்கு கூஜா தூக்குவோரும் அக்கறை இருந்திருந்தால் அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியிருப்பார்கள்.
எமது ஆட்சியின் போது அரச ஊழியர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கினோம். அவர்களது அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சம் 100 வீதத்தால் அதிகரித்தோம் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டால் வேதனையும் கண்ணீரையும் சிந்தும் கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வருகின்ற தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.