கோட்டாவுக்கு நாட்டுக்கு வர முழு உரிமையுண்டு; பாதுகாப்பு அளிப்பது அரசாங்கத்தின் கடமை!
சிங்கப்பூரில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வர விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனவும், அவர் வந்தால் பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு என்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்நாட்டின் குடிமகன் என தெரிவித்த அவர், நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி என்றும் அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு எனவும் கூறினார்.
அதேவேளை இந்த நாட்டின் , முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் காரியவசம் மேலும் தெரிவித்தார்.