டீசல் வாங்க 13,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பிரதேச அரச ஊழியர்கள்; எங்கே தெரியுமா?
13,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச ஊழியர் ஒருவரையும் பராமரிப்புத் தொழிலாளர் ஒருவரையும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) நேற்று (17) கைது செய்துள்ளது.
பொத்துவில் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொறியியலாளர் அலகு அலுவலகத்தைச் சேர்ந்த பராமரிப்புத் தொழிலாளி ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
நீர் வழங்கும் கால்வாய் துப்பரவு
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கச்சேனை பிரதேசத்தில் நீர் வழங்கும் கால்வாயைத் துப்பரவு செய்ய முறைப்பாட்டாளர் தலைமை வகிக்கும் விவசாயச் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் போதாது எனத் தெரிவித்து, மேலதிகமாக 51 லீற்றர் டீசல் செலவாகும் எனக் கூறி சந்தேக நபர்கள் இந்த இலஞ்சப் பணத்தை கோரியுள்ளனர்.
இதன்படி, 13,200 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றமை மற்றும் அதற்குத் துணை போனமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.