குரங்குகளை பிடித்து தனித்தீவில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் குரங்குகளை பிடித்து ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கே.டி.லால் காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த ஆராய்ச்சித் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரணவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த பல வருடங்களாக குரங்குகளால் விவசாய நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், பயிர்ச் செய்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.