ஜல்லிகட்டு தொடர்பில் தமிழக அரசின் அறிப்பு வெளியானது!
300 மாடுபிடி வீரர்களை கொண்டு போட்டி நடத்தலாம் எனவும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டு ஜனவரி 14இல் அவனியாபுரம், 15ஆம் திகதி பாலமேடு, 16ஆம் திகதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான முன்ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகளில், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதேவேளை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் , கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
- நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மாடுபிடி வீரர்கள் அடையாள அட்டை பெற வேண்டும்.
- இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கப்படுவர்.
- போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டு பார்வையாளர்கள் நெகட்டிவ் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.
- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.