இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெரும் தொகை பொருள் மீட்பு
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த இஞ்சி இன்று (13) அதிகாலை தோப்பு வலசை கடற்கரை பகுதியில் தமிழக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பொதிகள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டுப் படகுகளில் சமீபகாலமாக அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
உலர்ந்த இஞ்சி மூடைகள் பறிமுதல்
இந்நிலையில் இராமநாதபுரம் இன்று அதிகாலை திருப்புல்லாணியை அடுத்த தோப்புவலசை கடற்கரையிலிருந்து படகு மூலமாக உலர்ந்த இஞ்சி (சுக்கு) இலங்கைக்கு கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருங்கிணைத்த குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் சேதுகரையிலிருந்து தோப்புவலசை வரை கடற்கரை ஓரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது தோப்புவலசை கடற்கரை பகுதியில் 50 சாக்கு மூடைகளில் சுமார் 2 தொன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி மூடைகள் படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
உலர்ந்த இஞ்சி மூடைகளை பறிமுதல் செய்த பொலிஸார் அவற்றை திருப்புல்லாணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து நிலையில் , அவற்றை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சி இந்திய மதிப்பில் 10 இலட்சம் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.