கல்வி அமைச்சு இஸ்லாமிய மாணவர்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
அனைத்து பாடசாலைகளுக்கும் இஸ்லாம் பாட நுால்களை தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாட நுால்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, (Susil Premajayanth) அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாட நுால்களை மீள் விநியோகம் செய்தல் தொடர்பில், நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச்.இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று அவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதனையடுத்து இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகள், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஷஹ்பி தலைமையிலான நீதிக்கான மையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தினர்.
இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இஸ்லாம் பாட நுால்களை இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பாடநுால்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சரியா? அல்லது எவ்வாறான திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்று, அடுத்த வருடம் வழங்கப்படும் நுால்களில் சேர்த்துக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முன்னதாக பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பாடநுால்களில் சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்து கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், குறித்த பாடநுால்களை திரும்பப்பெற்றது.
இந்த நிலையில் திரும்பப்பெற்ற இந்த நுால்களையும் தற்காலிகமாக மீண்டும் வழங்குமாறு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உத்தரவிட்டுள்ளார்.