வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிவாரண திட்டத்தில் விமான டிக்கட்டுகளை கொள்வனவு செய்யும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலகிலுள்ள பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரேயொரு வேலைவாய்ப்பு முகவர் நிலையமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மத்திய கிழக்கு, ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பல வேலைவாய்ப்புகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணம், தொழிற்துறை மற்றும் திறமைசார் வேலைவாய்ப்புகள், சுகாதார சேவைகள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் தொழிற்சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
குறைந்த கட்டணங்களின் கீழ் இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஜப்பானிய வேலைவாய்ப்புகளில், குறிப்பாக ட்ரக் சாரதி வேலைவாய்ப்புகளுக்காக பாடசாலைகளை விட்டு விலகிய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்.
எனினும், அவர்களுக்கு ஜப்பானிய மொழித் திறமை அவசியமாகும்.
வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிப்பது மற்றும் மேலதிக விபரங்களைப் www.slfea.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.
மேலும் பயிற்சி பெற்ற, அரைவாசி பயிற்சி பெற்ற மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை இந்த வேலைவாய்ப்புகளுக்காக உள்வாங்க எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் ஈடுபடுத்துவதை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த வேலைவாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.
இதற்கு மேலதிகமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் விமான டிக்கெட் விற்பனை நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக புறப்படும் தொழிலாளர்கள், சந்தையில் காணப்படும் விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.