தாயின் மடியில் குதித்த சிறுமி ; கட்டுப்பாட்டை இழந்த கார், ஒருவர் பலி
காரை செலுத்தி வந்த பெண்ணின் மடியில் அவரது இரண்டு வயது மகள் குதித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரி ஒருவர், முச்சக்கர வண்டி மற்றும் சிறிய லொறி மீது மோதியுள்ளதுடன் இதில் பாதசாரி உயிரிழந்து, மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
காரை செலுத்தி வந்த பெண் தனது மகளுடன் தேவாலயத்திற்குச் சென்று , பின்னர் அவரை பின் இருக்கையில் அமரவைத்து களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
வாதுவ, தல்பிட்டி பகுதியில் வைத்து சிறுமி பின் இருக்கையில் இருந்து ஓட்டுநர் இருக்கைக்கு குதித்ததாகவும், இதன்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீதும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் லொறி மீதும் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.