மத்திய கிழக்கில் தாக்குதல்களால் தகர்க்கப்படும் எரிவாயு உற்பத்தி தளங்கள் ; உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் நடத்திய கடும் தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் 114 அமெரிக்க டொலரை எட்டியது.
இந்நிலையில், ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. ஈரானின் பொருளாதார ஆதாரங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

எரிவாயு உற்பத்தி நிலையம்
ஈரான் நேற்று பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.கத்தாரில் உள்ள ராஸ் லபான் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தை, ஈரானின் ஏவுகணை தாக்கியதில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உற்பத்தி தடைபட்டுள்ளது.
இதுகுறித்து கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல் காபி கூறுகையில், ''ஈரானின் இந்த தாக்குதல் கத்தாரின் ஏற்றுமதி திறனில் 17 சதவீதத்தை அழித்துள்ளது. இதனால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான வினியோகம் பாதிக்கப்படும்,'' என்றார்.
இதே போல் சவுதி அரேபியாவின் சாம்ரெப் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம், குவைத்தில் உள்ள மினா அல் அகமதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஹப்சான் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் ஆகியவையும் ஈரானால் தாக்கப்பட்டன.
இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. இதே போல் ஆசிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை இரட்டிப்பாகி உள்ளது.