வாழ்வில் துன்பங்கள், தடைகள் நீங்க ஆவணி விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
ஆவணி விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி வந்தாலும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இந்நிலையில் நாளையதினம் (27) ஆவணி சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது.
ஆலயங்களிலும் வீடுகளிம் விநாயக பெருமானை உள்ளன்போடு வழிபட்டால் வாழ்வின் இன்பங்கள் நிறைந்திருக்க கணபதி அருள் பாலிப்பார்.
ஆவணி சதுர்த்தி நாள்
முழு முதற்கடவுளாக விநாயகப் பெருமானை உரிய வழிபாட்டு விதிமுறைகளை பின்பற்றி வழிபடுவதால் வாழ்வில் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாளாகும். பொதுவாக விநாயகரை எப்படி வழிபட்டால் அதை அவர் ஏற்றுக் கொள்வார்.
எனினும் முறையாக வழிபட்டால் விநாயகரின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்றால், முதல் நாளை வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்து விடுவோம்.
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினமோ அல்லது அன்றைக்கு காலையிலோ புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அதற்கு பூ போட்டு, நைவேத்தியம் படைத்து வழிபடுவோம்.
ஆனால் இந்த வழிபாட்டில் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கவனித்து செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று கண்டிப்பாக களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை மட்டுமே வாங்கி வந்து வழிபட வேண்டும்.
காரணம் களி மண் என்பது பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியதாகும். அதோடு களி மண் பிள்ளையார் எளிதில் நீரில் கரையக் கூடியதாகும்.
விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை
விநாயகப் பெருமான் துன்பங்களை போக்குபவர் என்பதால், விநாயகர் சிலையை கரைப்பதால் நம்முடைய துன்பங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் மண்ணிற்கு சக்தி அதிகம்.
விநாயகருக்கு கொழுக்கட்டை, அவல், பொரி ,சுண்டல்கரும்பு, பழங்கள் என நைவேத்திய பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், இலைகள் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுவது சிறப்பு.
விநாயகருக்கு அனுசுயாதேவி , அரிசி மாவில் வெல்லம் வைத்து 21 மோதகம் உணவாக படைத்தார். அதை சாப்பிட்டதும் விநாயகரின் பசி அடங்கியதுடன், அவரது மனமும் மகிழ்ந்தது.
இதனால் எவர் ஒருவர் விநாயகருக்கு அனுசுயாவை போல் மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும் என பார்வதி தேவியே கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்தியாவில் விநாயகர் சிலையை , தொடர்ந்து மூன்று நாட்களும் விநாயகருக்கு ஏதாவது ஒரு படையல் படைத்து பூஜை செய்து வழிபாடுகள் செய்த பின்பு விநயகர் சிலைகளை கடலில் விட்டுவிடுவார்கள்.
நாமும் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழ ஆவணி விநாயகர் சதுர்த்தி நாளில் கணபதியை கைதொழுது வணங்குவோம்.