கம்பஹாவில் அதிகாலை பயங்கர சம்பவம்: உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை!
கம்பஹா மாவட்டம் - திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (27-11-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் வைத்திய நிலையத்தின் உரிமையாளரின் உறவினர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் திருமணமாகாத 59 வயதுடைய வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த வைத்திய நிலையத்தின் உரிமையாளரும் அவரின் கணவரும் வைத்தியர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் இருவரும் அங்கு பணிபுரிந்து வந்துள்ளனர்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்கிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், நேற்றிரவு திஹாரிய பிரதேசத்தில் இரண்டு கட்டிட பொருட்கள் விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவே இந்தக் கொலையையும், திருட்டுச் சம்பவங்களையும் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.