காலி முகத்திடலில் சுற்றித்திரிந்தவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக குறித்த நபர் காலி முகத்திடலில் சந்தேகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வடை விற்பனை செய்துள்ளார்.
அதேவேளை அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் “We want Gota ” என்ற வாசகம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியவாறு அந்த நபர் காணப்பட்டார். அந்த நபரின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டன.
அதன் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அடையாளம் கண்டு போராட்டம் நடந்த இடத்தில் பணியில் இருந்த பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும் அவர் அங்கு என்ன செய்து வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இன்று ஏழாவது நாளாகவும் காலி முகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.