நாட்டில் எரிபொருள் வரிசைகள்; பாடசாலைகள் மூடப்படுமா?
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது தொலைதூர கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தவோ இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கையில், பாடசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.

போர் சூழல், எரிபொருள் விநியோகம்
எனினும் , நாட்டில் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து ஆராயும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பல அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் சூழல், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசிய துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது இக்கட்டான சூழ்நிலையிலும் பொது சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.