தபால் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலியான இணையதளத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு வகையான நிதி மோசடி குறித்து அத்திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, கைபேசி குறுஞ்செய்திகள் ஊடாக பொதி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என அறிவித்து, அந்தப் பணத்தை இணையவழி முறையூடாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்திச் செலுத்துமாறு வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து 'Phishing Scam' எனும் மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மோசடிச் செயன்முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி அட்டை விபரங்களை உள்ளிடும்போது, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் மோசடியாகக் கொள்ளையிடப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் அத்தகைய குறுஞ்செய்திகளைப் பெற்றவர்களிடமிருந்தும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த 'Phishing Scam' குறித்து ஏற்கனவே பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இவ்வாறான மோசடியான குறுஞ்செய்தி இணைப்புகள், போலியான இணையதளங்கள் மற்றும் இணையவழி பணக் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அடையாளம் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தபால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP இலக்கங்களை மூன்றாம் தரப்பு நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் விசேடமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.