அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து ஒருகோடி மோசடி! கம்பி எண்ணும் முகவர்
அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த திருகோணமலை நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.
இலங்கை திரும்பியவர் முறைப்பாடு
திருகோணமலை ஓசில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக போலி அவுஸ்ரேலியா விசாவை வழங்கி அவரிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாவை மோசடியாக பெற்றுள்ளார்.
இதனையடுத்து அந்த விசாவில் இலங்கையில் இருந்து பயணிக்க முடியாது இந்தியா சென்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக இந்தியாவுக்கு விமான மூலம் அனுப்பி வைத்த நிலையில் அங்கு விசா போலியானது என தெரியவந்ததை அடுத்து அங்கிருந்து இலங்கைக்கு திரும்பினார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்தனர்.