இளைஞர், யுவதிகளை ஏமாற்றி நூதனமுறையில் மோசடி!
அரசாங்கவேலை பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, இளைஞர், யுவதிகளை ஏமாற்றியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தபால் அலுவலகம் ஊடாக செயற்படுத்தப்படும் PMT முறை நிதி மோசடி ஊடாக செய்த நபரே பதுளையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
சந்தேகநபர் தொடர்பில்,பதுளை, மஹியங்கனை மற்றும் ஹாலிஎல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பதுளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பண்டாரவளை பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளார்.
கடந்த கொரோனா தொற்றின் போது, பதுளை பொது நூலகத்திற்கு வருகை தரும் நபர்களின் தகவல்களை பதிவு செய்ய வைத்திருந்த புத்தகத்தின் இரண்டு தாள்களை கிழித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் அந்த அலைபேசி உரையாடல்களின் போது, தொழில் இல்லாதவர்களுக்கு அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.