பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர் வவுணதீவில் அதிரடி கைது!
நிலத்திற்கடியிலுள்ள புராதன பொருட்களை எடுக்கும் நோக்கில் அதிநவீன 'ஸ்கேனர்' இயந்திரத்தைக் கொண்டு நிலத்தை பரிசோதனை செய்துகொண்டிருந்த பெளத்த பிக்கு ஒருவர் அடங்கலாக நான்கு பேரை வவுணதீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 31 ஆம் திகதியன்று காலை வேளையில், கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை பகுதியிலேயே புராதன பொருட்களை நிலத்திற்கடியிலிருந்து எடுப்பதற்கு அதி நவீன ஸ்கேனர் இயந்திரங்கள் மூலமாக ஸ்கேன் செய்துகொண்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய அங்கு விரைந்து வவுணதீவு முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்பைடையினர் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது நிலத்தை பரிசோதனை செய்துகொண்டிருந்த மூவரையும் மதகுரு ஒருவரையும் பொலிஸ் விசேட அதிர கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த அதிநவீன ஸ்கேனர் இயந்திரம், கெப் ரக வாகனம், 4 கையடக்கத் தொலைபேசிகளளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் பெளத்த பிக்கு ஒருவர் அடங்கலாக சந்தேக நபர்பகள் நால்வரும், அவர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவ்வாறு கைது செய்யபட்டவர்கள் 29,33, 45, 52 ஆகிய வயதுடைய மொனராகலை, ஹொரணை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் மூவர் இராணுவ வீரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.