முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை சம்பவம் ; மேலும் ஒரு சந்தேகநபர் கைது
பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொல்கொட பாலத்துக்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்திருந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.
துப்பாக்கிச் சூடு
சுமார் 21 முறை அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்படி குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய பாணந்துறை ஹிரண பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது நடவடிக்கையை அடுத்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி கொலையை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர் அளித்த தகவல்களுக்கமைய அவரிடமிருந்து 5 வெட்டுக்கத்திகள், ஒரு கையடக்கத் தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராக்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெட்டுகத்திகள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.