சகோதரர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பியின் வாகனம்!
நுவரெலியாவில் அரச வாகனம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளால் நேற்றையதினம் (12-10-2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தின் சகோதரர் வீட்டில் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த வாகனம் மீட்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.