லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.
லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இலக்கம் 12 மாட்டிறைச்சி கடைக்குரிய ஏலத்தின் போது அரசாங்கத்துக்கு 2,380,000 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன் பேரில் அசோக சேபால இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.