நாடு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு யுவதி மாயம்!
நாடு கடத்தப்படவுள்ள ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி பிரேசர் என்ற யுவதியினை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் அவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்களால் அவரை நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி கெய்லி பிரேசர் செய்த விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
அத்துடன் குடியகல்வு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு காரணம் கூறாமல் வீசாவை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ உரிமை உள்ளதாகவும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளாலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நீதிமன்ற மேன்முறையீட்டு நீதியரசர் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி ஃப்ரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடந்த 10ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
அத்துடன், 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு குறித்த திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது கெய்லி பிரேசரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மாயமாகியுள்ளமை தற்போதுபோது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.