கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு
காலி ஹிக்கடுவை - நாரிகம கடலில் நீராடச்சென்ற மூன்று பேர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் 37 வயதுடைய பெண் ஒருவரும், 50 மற்றும் 18 வயதுடைய ரஷ்ய மற்றும் ஜெர்மன் நாட்டவர்களும் ஆவர்.

இதன்போது, கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளான பொலிஸ் சார்ஜென்ட் ருவன், பொலிஸ் சார்ஜென்ட் லால், பொலிஸ் கான்ஸ்டபிள் வலிசிங்ஹ, பொலிஸ் கான்ஸ்டபிள் குமாரசிங்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ரந்துனு ஆகியோர் அவர்களை மீட்டு, அடிப்படை முதலுதவிகளை வழங்கியுள்ளனர்.
இதேவேளை, ஹிக்கடுவை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச்சென்ற பெண் ஒருவர் நேற்று நீரோட்டத்தில் சிக்குண்டு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண் 63 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ரத்நாயக்க ஆகியோர் அவரை மீட்டுள்ளனர்.