சிங்கமலை வனப்பகுதியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு மாணவி பத்திரமாக மீட்பு
ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் சிக்கித்தவித்த 20 வயதுடைய நெதர்லாந்து நாட்டு மாணவியை ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று (06) மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையானது, ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த மாணவி
நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த லூனா (Luna) என்ற மாணவி, ருகுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்துள்ளார். கடந்த 4ஆம் திகதி ஹட்டன் பகுதிக்கு வருகை தந்த அவர், சிங்கமலை மலைப் பகுதிக்கு நேற்று (06) காலை தனியாகச் சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது பாதையை கண்டறிய முடியாமல் தவித்த அவர், வழியைத் தேடியபடி சிங்கமலை மலையின் உச்சிக்குச் சென்று அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் ஹட்டன் பகுதிக்கும் இடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார்.

அந்த முறைப்பாட்டிற்கு அமையத் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார், பாறை ஒன்றின் மேல் தவித்துக் கொண்டிருந்த மாணவியை மீட்டு பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட்களான பாலசூரிய (8824), சிறி (39127) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மதுஷான் (89877) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.