சீன கப்பல் தொடர்பில் வெளிச் சக்திகள் தலையிட முடியாது; ஜனாதிபதி ரணில் காட்டம்!
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும், வெளியகச் சக்திகளும் தத்தமது சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஒரு நாட்டின் வெளிவிவகாரம் சம்பந்தமாக அந்த நாட்டு அரசே தீர்மானம் எடுக்கும் என தெரிவித்த அவர் அதில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது எனவும் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும்போது அரசும், பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்த ஜனாதிபதி ரணில், அதன் பிரகாரம், சீனக் கப்பல் வருவதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருக்கின்றதாகவும் கூறினார்.
இந்த விடயத்தை உள்ளக சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள் எனவும் அவர் சாடினார்.
மேலும் எந்த ஒரு நாட்டையும் பகைக்கவேண்டிய, மோதவேண்டிய நிலைமை இலங்கைக்குக் கிடையாது என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , வரலாறு காணாத பொருளாதார அடியால் இலங்கை வீழ்ந்து கிடக்கின்றது . இந்நிலையில் அதிலிருந்து மெல்ல மெல்ல இலங்கை இப்போதுதான் எழுகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கைக்கு வரும் சீனகப்பலால் தமக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.