போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்
போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் காலி - டிக்சன் வீதி பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி - உனவட்டுன பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர், உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

போலி நாணயத்தாள்கள்
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பதற்காக, 400 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் சுமார் 128,000 ரூபா) பெறுமதியான போலி நாணயத்தாள்களை வழங்கியுள்ளனர்.
முறைப்பாட்டை அடுத்து உடனடியாக செயற்பட்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள், சந்தேக நபர்கள் தங்கியிருந்த காலி டிக்சன் வீதியிலுள்ள விடுதியைச் சோதனையிட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து மேலும் 5,200 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தான் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக ஹபராதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போலி நாணயத்தாள் புழக்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமை மற்றும் வெளிநாட்டு செலாவணி சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (08) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.