கொழும்பில் பொலிஸார் அதிரடியில் 2 கோடி ரூபா வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!
கொழும்புப் பகுதியில் உள்ள பல விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானத் தொகுதியை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
கொழும்புப் பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களைக் குறிவைத்து மதுவரி விசேட சோதனை பிரிவால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்ன தெரிவித்தார்.

மதுபான போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள்
இந்தச் சோதனையில் 4 குழுக்களின் கீழ் சுமார் 30 அதிகாரிகள் பங்கேற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த இந்த மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மேலும் , இந்த மதுபானத் தொகுதி இலங்கைக்கு எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்ன தெரிவித்தார்.