வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வழக்கு ; நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்ற உத்தரவு
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளர், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஒரு வருடத்திற்குள் பணத்தை செலுத்துமாறு நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்றம் நிபந்தனைப் பிணை வழங்கியுள்ளது.
ருமேனியா வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு எதிரான வழக்கு நேற்று நுகேகொட தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினரும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரும் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல், 6 மாதங்களுக்கும் மேலாக நிறுவன உரிமையாளரான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இந்த விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
சந்தேகநபருக்கு 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும், சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில், இரண்டு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை செலுத்த முடியும் என்று அவரின் தரப்பு சட்டத்தரணி உறுதியளித்தார்.
எனினும், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைச் செலுத்தி மூன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால், மேலும் தாமதிக்காமல் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்ட அதிகாரி சட்டத்தரணி ஜனக காரியவசம் வாதிட்டார்.
இந்தநிலையில் இரண்டு தரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதவான், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சந்தேகநபருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.
இதனை தவிர தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு தனிநபர் பிணைகள் மற்றும் 500,000 ரூபா ரொக்கப் பிணையும் பிரதிவாதிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிணையாளர்கள் தவறினால், 50 மில்லியன் ரூபா பிணைப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் மற்றும் பிணையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் கடவுச்சீட்டும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறினால், பிணை ரத்து செய்யப்பட்டு சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.