நுவரெலியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மத்திய நிலையம் திறந்து வைப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் பொது மக்கள் பாவனைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (2024.01.07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
"மனுசக்தி"எனும் தொனிபொருளின் கீழ் சமய கலாசார நிகழ்வுகளுடன் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் 05 ஆம் மாடியில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகராகரும் வடிவேல் சுரேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான, முன்னாள் மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன , நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த மத்திய நிலையத்தினூடாக வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பணியகத்தின் பதிவுகளை பெற்றுக்கொள்ளல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தல், பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் இந்த புதிய மத்திய நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
கடந்த வருடம் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அப்பகுதி சிறார்களினால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிளை பணிமனை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும்.