இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளித்த வெளிநாட்டு தூதுவர்கள்!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி இன்று வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22-09-2022) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பரிஸ் க்ளப் மற்றும் பரிஸ் க்ளப்பில் அங்கத்துவம் அல்லாத 23 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தேவையான அனைத்து அர்ப்பணிப்புக்களை செய்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் இதன்போது விளக்கமளித்தனர்.