துப்புரவு பணியாளர் செய்த நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்!
ஹட்டன் பகுதியில் உள்ள வீதி ஒன்றில் துப்புரவு செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு 52,000 ரூபாய் பணத்துடன் பை ஒன்று கிடைத்துள்ளது. அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஹட்டன் வீதியில் நேற்று முன்தினம் (27) காலை 43 வயதான ஆர்.ஜே.செல்வம் என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்த போது குறித்த பணப்பையை கண்டெடுத்துள்ளார். உடனடியாக அந்தப் பையை ஹட்டன் நகர சபையின் தலைவரிடம் சென்று வழங்கியுள்ளார். நாட்டில் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த பணத்தை உரிமையாளரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, நகர சபை தலைவரிடம் செல்வம் கோரியுள்ளார். பணத்துடனான பை காணாமல் போனதை அறிந்த ஹட்டன், ஆரிபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய், மீண்டும் பையை தேடி நகரத்திற்கு சென்றுள்ளார்.
இதேவேளை நகரம் முழுவதும் பையை தேடிவந்த பெண்ணை அவதானித்த மற்றுமொரு நகர சபை ஊழியர், விடயத்தை வினவியதுடன், நகர சபை தலைவரிடம் பணப்பை உள்ளதென கூறியுள்ளார்.
நகர சபை தலைவரிடம் சென்ற குறித்த பெண் பணப்பையை பெற்றுக்கொண்டார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள செல்வம், குறித்த பணத்தை தனக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டமையை நகர சபை தலைவர் மற்றும் பெண் பாராட்டியுள்ளதுடன், அவரின் நேர்மையான செயற்பாட்டை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.