பங்களாதேஷிற்கு திருப்பி செலுத்தப்பட்ட முதலாவது தவணைப் பணம்!
2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.
பங்களாதேஷ் வங்கியின் ஊடக பேச்சாளரும், நிர்வாக பணிப்பாளருமான மெஸ்பால் ஹக், முதலாவது தவணைப்பணம் கடந்த (17.08.2023) செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார் என தகவலறியப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணைப் பணம் எதிர்வரும் (30.08.2023) ஆம் திகதி செலுத்தப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த ஆண்டுக்குள் இலங்கை மொத்தத் தொகையினையும் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மூன்று மாதங்களில் இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
இறுதியாக, கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தில் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடன் ஒப்பந்தத்தின்படி, செலுத்த வேண்டிய வட்டியை இலங்கை முறையாக செலுத்தி வருவதாக பங்களாதேஷ் வங்கி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.