குடியிருப்பில் தீப்பரவல் 10 வீடுகள் சேதம் ; உடமைகள் தீயில் கருகி நாசம்!
நுவரெலியா பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
லயன் குடியிருப்பில் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவலில் 10 வீடுகள் தீயினால் சேதமடைந்துள்ளன. அதிலும் 4 வீடுகள் முற்றிலும் தீயினால் சேதடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகளில் உடமைகள் தீயில் கருகிய நிலையில், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீப்பரவல் காரணமாக 30 பேர் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் மதிப்பிடப்படவில்லை என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.