கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி
சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பக்கசார்பற்ற விசாரணை
வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கொலை கலாசாரம் சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாசாரத்தின் மற்றொரு அங்கமாகும்.

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை, காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது. இந்த கொலை கலாசாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும், ஆகையால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது கொலை குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.