சட்டவிரோத கனிம வள அகழ்வை தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை
மன்னார் தீவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் அகழ்வு செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை பரிசீலனை செய்வதற்காக, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் நீதி மையம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியாகு மார்கஸ் உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (13) பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அதன்போது, குறித்த மனுவை உறுதிப்படுத்துவதற்காக பெப்ரவரி 10 ஆம் திகதி அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
மனுவில் பிரதிவாதிகளாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம், அதன் பணிப்பாளர் நாயகம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், மன்னார் பிரதேச செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மன்னார் தீவை அண்டிய பகுதிகளில் கனிம அகழ்வு நடவடிக்கைகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியில் இலங்கைக்கு தனித்துவமான, உயர் மதிப்பு கொண்ட கனிம வளங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், உரிய டெண்டர் அழைப்பு இன்றி அந்த கனிம அகழ்வுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளனர்.
இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உள்ளூர் முகவர்கள் மூலம் கனிம அகழ்வு செய்து, உரிய மதிப்பு கூட்டல் இன்றி அந்த கனிம வகைகளை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த கனிம அகழ்வுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றை செல்லாதவை என அறிவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
அந்த அகழ்வு நடவடிக்கைகளுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் மதிப்பீடு செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கும், புதிய உரிமங்கள் வழங்குவதை தடுக்கும் உத்தரவை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கும் உத்தரவு பிறக்குமாறு மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.