பண்டிகைக்கால நிவாரண பொதி ; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்
நாட்டு மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் உணவுப்பொருள் பொதிகளை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் நிதி 1500 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் ஐயாயிரம் ரூபாய் பொதியொன்றை 2500 ரூபாவுக்கு வழங்குகின்றோம். அஸ்வெசும் இல்லாத ஆனால் அஸ்வெசுமவிற்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்குவோம்.
அதற்காக லங்கா சதொச நிறுவன வழங்குனர்களிடம் விலை மனு கோரி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாட்டரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, ரின்மீன், சிவப்பு சீனி, கோதுமை மா, சமபோஷா, சோயா உள்ளிட்ட 15 - 17 கிலோ கிராம் எடையுடைய உணவுப் பொருள் பொதியொன்றை நாங்கள் வழங்குவோம் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.