காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியர் ; காதலன், மனைவியின் தலைசுற்றவைக்கும் வழக்கு பட்டியல் ; அடுத்தடுத்து ட்விஸ்ட்
தெல்தெனிய பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள, உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது திருமணமான மனைவி ஆகியோரால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் பல குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை நுவரெலியா தலைமையக பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரால் நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விசேட விசாரணை அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸாரின் அறிக்கைகள்
கடந்த ஜூன் 17 ஆம் திகதி பதிவான இந்த மனிதக்கொலை சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரந்த அளவிலான விசாரணைகளின் போதே இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்தக் குற்றங்களின் பிரதான சந்தேகநபராக கொஸ்கொல்ல, ஹொரம்பாவ என்ற முகவரியைச் சேர்ந்த ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவியான ரத்நாயக்க முதியான்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க என்பவரும் இந்த மோசடிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பிரதான சந்தேகநபர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றியமை, வெளிநாட்டு வாகனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நாட்டின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதற்கமைய, கம்பஹா மேல் நீதிமன்றம் (வழக்கு எண் B 1893/19) - திருமணம் செய்வதாகக் கூறி 11,873,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை மற்றும் WP CBG 8532 என்ற இலக்கமுடைய காரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மோசடி செய்தமை.
புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றம் (வழக்கு எண் B 98858/05/2018) - திருமணம் செய்வதாகக் கூறி 1,721,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றம் (வழக்கு எண் B 15191/05/2019) - திருமணம் செய்வதாகக் கூறி 1,376,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் (வழக்கு எண்கள் B 33176, 33174) - வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 2,200,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
புதுக்கடை நீதிமன்றம் (வழக்கு எண் B 7002/23) - வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 4,200,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
இவற்றுக்கு மேலதிகமாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இவருக்கு எதிராக புதுக்கடை (B 88175/18, B 2 1763), ஹொரண (B 35175/18) மற்றும் கடுவலை (B 12025/18) ஆகிய நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் (198333704184) ஊடாக VPN வழியாக AMIS தரவுக்கட்டமைப்பை பரிசோதித்த போது, பேலியகொடை பொலிஸ் நிலையத்தினால் மற்றும் மோசடி விசாரணைப் பிரிவினரால் 2023.11.13 அன்று அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதுடன், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதமான பண மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் மனைவியான நெத்மி அமாயா ரத்நாயக்க என்பவருக்கு எதிராகவும் பல நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.