மழைநீரில் காருடன் மூழ்கிய பெண் மருத்துவர் பரிதாப பலி!
தமிழகத்தில் புதுக்கோட்டையில் ரயில்வே தரைப்பாலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தேங்கி நின்ற மழை நீரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொட்டும் மழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உயிர்ச் சேதமும் ஏற்பட்டுவருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலத்தில் பலத்த மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது.இதனை அறியாமல் பெண் மருத்துவர் ஒருவர் பாலத்தை காரில் கடக்க முயன்றார்.
இதன்போது காரின் சைலன்சருக்குள் தண்ணீர் புதுந்ததால் வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற அவரது மாமியாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த குறித்த பெண் மருத்துவர், புதுக்கோட்டையில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றபோது, இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.