யாழில் சக மாணவர்களால் மற்றுமொரு மாணவனுக்கு ஏற்பட்ட நிலை!
யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவரின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர் யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய மூவரும் இன்றைய தினம் (12-11-2023) மாலை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை (08-11-2023) யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்புகையிலேயே மாணவன் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் நேற்றைய தினம் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அவரை சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த மாணவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூன்று மாணவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று மாலை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.