தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹப்புகஸ்தனைத் தோட்டப் பகுதியில் தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் இன்று (23) காலை 9.00 மணியளவில் பதிவாகியுள்ளது. வேலைக்காக தோட்டத்திற்குச் சென்ற தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டப் பகுதியில் சடலமொன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக தோட்ட நிர்வாகத்தினருக்கும் மஸ்கெலியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் ஹப்புகஸ்தனைத் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருமணமான அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் நீதவான் சடலத்தைப் பார்வையிட்டதையடுத்து, ஹட்டன் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.