பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளார்.
1993ம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு, ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான ‘கோலங்கள்’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.
அந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன்பின்னர் 2009ம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ படத்தை இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இவை தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (17ம் தேதி) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.