வவுனியாவில் சில மணி நேரத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்: பாரிய அதிர்ச்சியில் மக்கள்
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, காத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே சினோபாம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (13.12.2021) பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றிருந்ததுடன், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தடுப்பூசி ஏற்றிய பின் சிறிது நேரம் அவ்விடத்தில் அமர்ந்து இருந்து விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்றுள்ளார்.
வீடு சென்று சில மணி நேரத்தில் திடீரென குறித்த நபர் மரணமடைந்துள்ளார். இதனை அடுத்து அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சில நோய்களுக்கு உட்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலத்திற்கு தற்போது பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள அவரது சடலத்தை உடனடியாக உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.