போலி சான்றிதழ் வழங்கிய நிறுவனம் இடைநிறுத்தம்
வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் போலியாக தயாரித்து வழங்கியமைக்காக, மாவனெல்லையில் உள்ள NS Lanka பயிற்சி நிறுவனத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பயிற்சிகளை நடத்துவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறது. இந்த நிறுவனங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

போலி சான்றிதழ்கள்
இந்நிலையில் குறித்த நிறுவனம் முதலில் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு, பயிற்சிகளை வழங்கியுள்ளது. இருப்பினும், அவர்கள் தொடர்புடைய நிபந்தனைகளை மீறி தனிநபர்களுக்கு போலி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு பெப்ரவரி 05 முதல், மாவனெல்ல பகுதியிலும் பயிற்சி படிப்புகளைத் தொடங்கியுள்ளனர், ஆனால் மாவனெல்ல கிளைக்கு மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
நடத்தப்பட்ட விசாரணையில் NS Lanka பயிற்சி நிறுவனத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பணியகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.