பதவி உயர்வு மறுக்கப்பட்டு கட்டாய ஓய்வு ; கலங்கும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்
தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற அவருக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

பதவி உயர்வு
கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார்.
ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும்
அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.