இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் நிதியுதவி வழங்கியது
இலங்கைக்கு அவசர அனர்த்த மனிதாபிமான நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை அறிவித்துள்ளது.
இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவி
மொத்த 1.8 மில்லியன் நிதியில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பின் அனர்த்த அவசர நிதியத்தின் மூலம் அனுப்பப்படும் 500,000 யூரோவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய நிவாரணம், பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அவசர உதவியை வழங்கும் இந்த ஆதரவின் மூலம், அந்த குடும்பங்களுடன் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் துணை நிற்கிறோம் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான வலிமையையும் ஆதரவையும் அவர்களுக்கு வழங்கவும் நாங்கள் இங்கு உதவ இருக்கிறோம்.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிவில் பாதுகாப்புப் பொறிமுறை மூலம் பொருட்களின் அடிப்படையிலான உதவிகளையும் இலங்கைக்கு வழங்குகிறது. இதில், ஜேர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களையும், பிரான்ஸ் 3,400 தங்குமிடப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளன.
அத்துடன், இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மனிதாபிமான உதவி 87 மில்லியனை யூரோவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், வெப்பமண்டல புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற பிராந்தியத்தில் ஏற்பட்ட பிற அனர்த்தங்களுக்காகவும் அவசரகால நிதி திரட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.