இலங்கை விமானப்படைக்கு பெறுமதியான உபகரணங்களை வழங்கிய அமெரிக்கா
அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபாய்) பெறுமதியான முக்கியமான ஆகாய போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த உபகரணங்களில் எரிபொருள் ட்ரக் வண்டிகள், ஃபோர்க்லிஃப்ட்கள் (Forklifts), பேரொளி விளக்குகள் (Flood Lights), மின் இயந்திரங்கள் (Ground Power Units), மற்றும் சரக்குகளை ஏற்றும் காவிச்செல்லக்கூடிய தளங்கள் (Portable Cargo-Loading Platforms) ஆகியவை அடங்குகின்றன.

பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிக வேகமாக நிவாரண நடவடிக்கை
இவை அனைத்தும் தற்போது செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உபகரணங்கள் C-130J மனிதாபிமான நிவாரணப் நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவியளிக்கின்றன.
நிவாரணப் பொருட்களை பெறுதல், எரிபொருள் நிரப்புதல், மின்சாரம் வழங்குதல், ஏற்றுதல் மற்றும் நகர்த்துதல் போன்ற பணிகளை இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் விரைவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் இவை உதவுகின்றன.

இதன் மூலம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிக வேகமாகவும் அதிக அளவிலும் நிவாரண உதவிகள் சென்றடைய அமெரிக்காவின் ஆதரவு பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றது.
அதேவேளை கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உயிர்காக்கும் உதவிகளுக்கு மேலதிகமாக இந்த உபகரணங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
