இங்கிலாந்து நிகழ்வு ரத்து ;நாமல் ராஜபக்ச சவால்களுக்கு அஞ்சாதவர் ; இந்திக அநுருத்த
பிரித்தானிய வாழ் தமிழர்களின் எதிர்ப்பால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஒக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,

தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வராது
புலம்பெயர் தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தத்தினால் நாமல் ராஜபக்சவின் விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டமை இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இத்தகைய எதிர்ப்புகள் காணப்பட்டன.
எனினும், எத்தகைய மோதல்கள் இருந்தாலும் அந்த தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவே நாமல் ராஜபக்ச அங்கு சென்றார். அவர் சவால்களுக்கு அஞ்சாத ஒரு இளைஞர் என்பதால் இதனைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ராஜபக்சவினரே நாட்டை இந்த நிலைக்குத் தள்ளினார்கள் என மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அமைச்சர்கள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்துள்ளதால், தங்களின் கடைசித் தருணத்தில் கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே, எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் ஒன்றிணைந்து கிராம மட்டத்திலிருந்து அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.