பசிலின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, இரட்டைக் குடியுரிமையைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லை என்று மொட்டு கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்தார்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்ததாலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தில் தான் பங்கேற்கவில்லை எனவும் அவர் கூறினார்.
நான் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயம் ஆதரவாக வாக்களித்திருப்பேன். ஏனெனில் 19 ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் வர வேண்டும் என எமது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார்.
இரட்டை குடியுரிமை தடை
இரட்டை குடியுரிமை தடையால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வரும்போது அது தொடர்பில் பஸில் ராஜபக்சவிடம் கலந்துரையாடினேன்.
இதன்போது, இரட்டை குடியுரிமையை கைவிடும் முடிவை நான் தற்போதே எடுக்கப்போவதில்லை, எனவே, 22 குறித்து நீங்கள் முடிவை எடுங்கள். இது விடயத்தில் என்னை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என பஸில் ராஜபக்ச கூறியதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.