மட்டக்களப்பில் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்ட முக்கிய அரசாங்க அலுவலகம் ; வெடித்தது போராட்டம்
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தை இன்று (14) தற்காலிக நிலை ஊழியர்கள் முற்றுகையிட்டு, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தற்காலிக ஊழியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும்போது எந்த கல்வித்தகமையும் கோராத நிலையில் இன்று கா.பொ.த.சாதாரண தரம் கற்றிருந்தால் மட்டுமே தமது தொழிலை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (14) அந்த அலுவலகத்தில் க.பொ.த. சான்றிதழ் கொண்ட தற்காலிக ஊழியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், கல்வித் தகுதி இல்லாததால் தங்களை புறக்கணிக்கும் முயற்சி நடைபெறுகிறது எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
“மழையும் வெயிலும் பார்க்காமல் வீதிகளில் கடுமையான பணிகளை செய்துள்ள எங்களை, இப்போது கல்வி சான்றிதழ் இல்லையென புறக்கணிப்பது நியாயமல்ல. எங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாக்கப்படுகிறது,” என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சிறந்த சேவையையும், குறைந்த ஊதியத்தையும் ஏற்றுக்கொண்டு மாதம் ரூபா.30,000 சம்பளத்தில் கடமை ஆற்றும் தங்களுக்கு விடுமுறை இல்லாமல் பணியாற்றும் நிலையிலும் நிரந்தர நியமனம் வழங்க முடியாமல் பின்னடிப்பு நடக்கிறது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு பின்னடிக்கும் செயற்பாடுகளை கைவிட்டு அனைவரையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்ட இடத்திற்கு வந்த அதிகாரசபையின் சில உயர் அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கையை பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்தனர்.